Friday 25 November 2016

சொல்லிடாத ஓர் வார்த்தை..!


இதுவரை யாரோடும்
சொல்லி பழகாத
ஓர் வார்த்தை..!

பழகி சொல்ல தோணுகையில்
தயக்கம் என்னை
தடுக்க கண்டேன்!!
ஆசைகளை ஒடுக்க கண்டேன்
நடுக்கம் கொண்டேன்..!!

இது தவறோ
என்றெண்ணம் - மனதோடு
எழாமல் இல்லை..!
சரியாய் இருக்கும்
என்ற நம்பிக்கை
துளிர்க்காமல் இல்லை..!

தவிர்ப்புகள் புரிகையில்
தயக்கம் கொள்கிறேன்..!
தள்ளியே நிற்கிறேன்..!
தனிமை காண்கிறேன்..!

தடுமாற்றம் தெரிந்துவிட
கூடாதென
உறுதிமொழி கொள்கிறேன்..!
அவ்வண்ணமே எண்ணிய
எண்ணம் கொல்கிறேன்..!

என் மௌனங்களுக்குள்
இருக்கும் வார்த்தைகளை
விழிகளால்
மொழிபெயர்த்து

இதழோர சிரிப்பில்
ஒப்புவித்து போகும்
ஒவ்வொரு முறையும்
என்னை பிரம்மிக்க
வைத்தாய்..!

மிக துல்லியமாய்
மௌனங்கள்
பெயர்த்த உனக்கு
இதழ்கள் சொல்லிட
துடிக்கும் வார்த்தைகள்
புரியலையா..?

இட்ட மன இடர்
தாண்டி வெளி வருகிறேன்..!
தீப சுடர் காண்கிறேன்..!

விருப்பமற்று வாழ்ந்த
நானோ - இன்று
தவறுதலாக கூட
தவற விட விருப்பமற்று
வாழ்கிறேன்..!

யாரோடும் சொல்லாமல்
இன்று மட்டிலும்
என்னோடு மட்டுமே
வைத்திருக்கிறேன்..!
பொக்கிஷம் என
பொத்தி வைத்திருக்கிறேன்..!

No comments:

Post a Comment