Friday 11 August 2017

(தீ)ர்ப்பொன்று கொண்டு..!





தூரமாக்கி துன்புறுத்துகிறாய்..!
நேரம் தாழ்த்தி காயம் செய்கிறாய் ..!

தினசரி முடிகையில்
இதனின் முடிவு
வேண்டுகிறேன்..!
குறுந்தகவல் எதிர்நோக்குகிறேன்..!

தொலைத்தவை கண்ட..
தொலைத்த பாவை கண்ட..
என் மனம்
வார்ப்பென உனை கண்டிட..!

வஞ்சங்கள் எங்கேனும் கண்டாயோ..
கொண்டதாய் எண்ணினால்
இக்கணம் பிரிகிறேன்..!

முழுமை அறிந்து
இவ்வாளுமை செய்வாயின்
தலைதாழ்த்தி
ஏற்றிடுவேன்..!

அறியாப்பிழை ஒன்று
என்று நானறிவேன்..!
உள்ளர்த்தம் அறிந்திடுவாய்
என்றெண்ணிய எண்ணம்
என்னைமட்டிலும் தவறு..!

மிச்சவை தரும் கோவம்
எங்கனம் சிவக்கும்..!
உன் சிரிப்பின் சிவப்பை விட..!

அறிந்திட முயல்வாய்
என்றெண்ணி -
காலம் தாழ்த்தி..
நேரம் கடத்தி..
இவ்வுறவு முடித்திட
விருப்பமில்லை..!
விரும்பவுமில்லை..!
அறிவாய் நீ இதை என அறிவேன்..!

வேண்டிய வாய்ப்புகள்
நிராகரிக்கப்பட...
வார்த்தைகளற்று
நிர்கதி ஆனேன்..!
நீ இன்றி நிர்மூலம்
ஆகிறேன்..!

உறவின் நீள அகலம்
அழகாய் நீ
அளந்த நிமிடம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நான் சிதறி போனேன்..!

என் சிதறல்கள் கண்டும்
காணாதது போலவே
கதைக்கின்றாய்...
மெல்ல மெல்லமாய்
என்னை வதைக்கின்றாய்..!

வார்ப்பென எண்ணி வாழ்ந்தேன்
தீர்ப்பொன்று கொண்டு
உறவு தீர்த்தாயே..!

தூரமாக்கி துன்புறுத்துகிறாய்..!
நேரம் தாழ்த்தி காயம் செய்கிறாய் ..!
கோபத்தின் உச்சத்தில்
உறவு தொலைக்கிறாய்..!

வாழ்வில் தொலைகிறோம்..!
நன்றிகள் பல..!
என்றும் நட்புடன்..!

Thursday 20 April 2017

இளைப்பாறும் நிழல்..!!

ஒவ்வொரு அணுவோடும்
வெற்றிடம் தேடி தேடி
நிதம் நிரப்பிய
உன் நினைவுகள்..!

செயலிழந்து போன
என் செயலிகள்
புத்துயிர் பெற்ற நாள்
நீ அறிவாய்..!

திரை கடல்
ஓடி திரவியம் தேடு..!
ஊர் அறிந்த கூற்று..!

உணர்ந்தறிகிறேன்..!
செயலியின் திரையில்
தவற விட்ட திரவியம்
காண்கிறேன்..!
கண்களின் வழியே
திரவம் வழிய காண்கிறோம்..!

மிச்சங்களின் உச்சமோ
உச்சங்களின் எச்சமோ
எச்சங்களின் மிச்சமோ..

எதுவாகி போனோம்
நாம் இன்று..?

பகிர்ந்திட முடியா
ஒன்றொன்று..!
நிம்மதி பயிர்க்குமென
நானே புறம்தாண்டி
வந்த தருணம்..!

தோன்றிடும் உள்ளெண்ணம்
பகிர்ந்திட முடியா
உறவாகவே
இன்றோடும் தொடர்கிறோம்..!

தூக்கம் தாங்கிய தோள்கள்
துக்கம் ஏந்திய விரல்கள்
யாவும் தொலைத்த
வன்கொடுமைகள் தாண்டி

வரும் பொழுதுகள்
எவையும் தவறவிட
திராணியற்று
இளைப்பாறும் நிழலென
தோள்  வேண்டி
தொடர்கிறோம்...!

சாத்திய கூறுகள்..!!

நொடிகளில் சிதறிடுமோ..?
சிதை எரிகையிலும்
அணைந்திடாது..!
நின் நினைவும்
நம் காதலும்..!

யாதொரு நெருடலின்றி
முழுமனதோடு தோல்வி
ஏற்கிறேன்..!

நின் காதல் -
என்னினை விட
மிக சுத்தம்..!

தனக்கென கொஞ்சமென
ஏதும் வைத்திராது
மொத்தமென என் மீது
காதல் பொழிந்தவள்..!

சாத்திய கூறுகள்
கண்டிடும் ஆராய்ச்சி
இது மட்டிலும் முடியவில்லை..!

துளியும் சந்தேகமின்றி
சத்தியமென
என் வார்த்தைகள்
என் பாதைகள்
நம்பியவள் நீ..!

நின் காதலும்..
நீயும்...
என்னினை விட
மிக சுத்தம்..!

தேகம் சேராது போயின்
நின் நினைவு அகன்றிடுமா..?

உன்னின் சிநேகம் போதும்
இவ்வாழ்வு வாழ்ந்திட..!

காதல் வீணை..!


உன் எத்துப்பல்லின் அழகில்
ஒளிர்ந்த வெளிச்சம்
அறியாமல் திரிந்தேனோ..?

முயல் என்று உன்னை
சில நேரங்களில்
சொல்லி சிரித்ததுண்டு...!

கயல் என்று காதலோடு
உன் கண்ணை
வர்ணித்ததுண்டு..!

அப்பொன்றும் இப்பொன்றும்
அல்லாமல் எப்போதும்
என் துணை வேண்டி
தேடி  இருந்தவள் நீ..!

நல்யோகம் வாய்க்க பெற்றும்
யோகி போல நான் இருக்க
துரோகி நான் தானே ஆவேன்..!
நீ ஏன் அழுகிறாய்..?

தொலைத்தவன் நான் தானே
காதலையும்
உன்னையும்...!

ஏதோ ஏழரை பிடித்தவன்
போலவே கடக்கின்றேன்
எல்லா நாளையும்..!

நீ இன்றி போன இங்கே
நான் எங்கு போனாலும்
நீயே..!

யார் வந்து
மீட்டு தருவார் உன்னை..?
மீண்டும் காதல்
வீணை வாசிக்க..?

Thursday 23 March 2017

இந்நாள் கடந்திருப்பேன்..!


யாவும் யாரோ ஆகிவிட
நான் யாராகி போனேன்
இன்று..?

சில நேரங்களில்
சொல்ல முடியா
தனிமை சோகங்களில்
விரக்தி சிரிப்பு
உதடுகளில் தவழும்..!

உன் பொருட்டு வேண்டி
பார்த்திட கூடாது
என்றுஒதுங்கி
ஊர் தாண்டி
உறவு தாண்டி
பறந்தொரு பயணம் போனவன்..!

பார்த்தால் என்னாவேன்
என்பதை தாண்டி..
என்னாவாய் நீ
என்றெண்ணிய எண்ணம்
மறந்திருக்க வாய்ப்பில்லை
நீயும் நானும்...!

அந்நிகழ்வு முடிந்து
ஓராண்டாகி போன
தருணத்தில்..

பயந்து ஒதுங்கிய
நிஜத்தின் நிழற்படம்
கண்முன் தீட்டுகிறாய்
கவலை மீட்டுகிறாய்
கண்ணீர் ஏற்றுகிறாய்
நினைவுகள் நீட்டுகிறாய்...!

நிகழும் நிஜ
காதல் காட்டுகிறாய்..!
ஜோடியாய் ஒன்றிணைந்த
அத்தனை படங்கள்
யாவும் ஓன்றிணைத்து
யாவும் நீ
என்ற
வாசகம் வடிக்கிறாய்..!
வாழ்க்கை யாசகம்
கூச்சலிடும் நான்..!

புகைப்படம் பார்த்த வேளையில்
நிமிடம் நகர மறுக்கிறது
ஒரு கணம்...!
யாவும் கனவோ..?
என்றெண்ணும்
மேதை தான்
இன்னமும் நான்..!

தேவை என்னென்று
புரியாத நான்..!
புரிந்த பொழுது
பாவை தேவையில்
நான் இல்லை..!

சாயம் போகுமோ காதலும்..?
மாயம் ஆகுமோ நின்
நினைவுகளும்..!
மறைத்தே போனாயோ..?
மறந்தே போனாயோ..?

என்னானேன் நான்..?
என்னாவேன் நான்..?
சிறு சிந்தனை - உன்
சிந்தையில் கொண்டிருந்தாய்
ஆயின் - இந்நாள்
கடந்திருப்பேன் -இன்னல்களற்று..!

அன்றொரு நாள்
ஏதோ ஒரு ஊரில்
யாரும் அறிந்திடா
இடம் தனில்
தனிமையில்
அழுது அழுதே
கடந்த என் அன் இந்நாள்..!

இன்று நீயும் நானும்
ஒன்றென இருந்திட்ட
என் அறையில்
மீண்டும் தனிமையில்
அழுது கடக்கிறேன்..!

ஒவ்வொரு வருடமும்
வந்தாக போகும் இந்நாள்...!
அழுகைக்கெனவே நான்
ஒதுக்கி வைத்துள்ள
உன் நன் நாள்..!
வாழ்க வளமுடன்...!

தூது செல்லும் மேகமே..!

வானம்  தழுவும் மேகமே..
தழுவியபடியே நழுவி நழுவி..
மெல்ல மெல்ல நகர்ந்தேறி
நீயும் ஓர்  நாள் சென்றிடுவாய்..!

உலகம் வியந்து
செல்ல நினைத்திடும்
அப்பிரபஞ்ச காண்டம்...!

உலா வரும் நிலவே
ஓர் நாள் நீயும் உறங்கிடு..!
இல்லை மெதுவாய்
மேகத்தின் பின்
சென்று மறைந்திடு..!

ஓ சூரியனே..!
உனக்கும் இவ்விதி
பொருந்தும் என்றுணர்ந்திடு...!

ஒருங்கிணைத்த
சோகம் சேர்த்து
கருமை தீட்டிய
கார்மேக முகம் கொண்டிடு..!

ஊர் சேர்த்து
தேர் இழுப்பார்
திருவிழாவில்...!

ஊருக்கே தேர் இழுத்த
எந்தன்
ஒற்றை தோள்
அறிவால் அவள்..!

ஊரே நனைந்திடும் படி..
ஊரே நினைத்திடும் படி..
ஓர் பெருமழை பொழி..!

மறவாது கூறிடு..!
செங்குத்தென பாயும்
துளிகளிடம்...
இம்மழையின் செயலும்
அத்துளியின் சேவையும்..!

நேரென அவள்
நெற்றிப்பொட்டில் விழுந்து
மெல்லமாய் உருண்டோடி
நெஞ்சாங்கூட்டில் இறங்கிடு..!

விஷமென தேக்கி
வைத்திருக்கும் - அவளின்
இயலாமை கரைத்திடு..!

அவளை உலுக்கி உலுக்கி..
அவளை உலுக்கி உலுக்கி...
நீ எத்தருணத்திலும்
தவறில்லை என்றுரைத்திடு..!

வருத்தங்களே ஆயினும்
அழுத்திடட்டும் அந்நாள்
அவளும்..!
அவள் அழுகை ஓயும்
வரை...
ஒரு கணம் கூட
நீயும் ஓய்ந்திடாதே..!

அவளின் வீணற்ற
குற்றஉணர்ச்சிகள்
மடியும் முன்
நீ முடியாதே..!

நீரோடு நீராக
சோகம் கலக்கட்டும்..!
இனிமேல்
அவள் வாழ்வு களைகட்டும்..!

அவள் காதுகளில் வடிகின்ற
துளிகளிடம் கோரிடு..!

காலச்சக்கரம் சுற்றிய
கலாச்சார
திசையில் மாறித்தான்
போனோம் நாமும்..!
நிச்சயம் பிழை
உன் மீதில்லை..!

அவள் பால் என் காதல்
சுத்தம் என்று
மழை சத்தம் தாண்டி
கூறிடு..!

இதை மட்டும்
என் சேதியாய்
தகவல் தந்திடும்படி...!

உன்னின் துளி போல
அத்தனை சுத்தமானவள்..!

அழுதோய்ந்த அவள்
முகம்தனை உன் நீர்
கொண்டு கழுவிடு..!

அவளின்..
இயலாமை,சோகம்,
அழுகை,
காதல்,அன்பு,
என யாவும் கண்டு
நானே கேட்டிடாத
ஒரு செயல் நீயும் செய்வாய்..!!

உலகம் கண்டிராத ஓர் நிகழ்வு...!
உலகம வியக்கும்
தினமனவே அந்நாள் மாறும்..!

இக்காதல் கண்டு
நீயும் கலங்கி...
சரியனவே
ஒற்றை புள்ளியில்
ஒரே நேரத்தில்
உலகின் அனைத்திலும்
ஓர் பெருமழை பொழிவாய்..!
சரித்திரம் படைப்பாய்..!

முடிக்கையில் நீயே கூறிடுவாய்..!
நாங்கள் இணைந்திருக்க
வேண்டிய
துணைகள் என்று..

தூது செல்லும் மேகமே..!
போதும் உன் சேவை...!
தூறல்களில்
தூரங்கள் குறைத்தாய்..!
மனக்குறை தீர்த்தாய்..!
என் இதயம் குளிர்ந்தது..!

Tuesday 21 February 2017

நின் அகம் புறம் அறிந்திடாமல்...!



பழிச்சொல் சாமரம்
வீசியதில்லை
எந்நிலையிலும் நானறிந்து..!

ஏனெனில்..
உன் வாஞ்சைகளில்
வஞ்சங்கள் கண்டதில்லை...!

சுய சுற்றம் கொண்ட
பாச நலத்தின்
விலை என்னுயிராகி
போய்விடின் என்றுணர்ந்தின்
நிஜம் மாறியிருக்குமோ...?

தொடர்ந்திடும்
நித்திரை நினைவுகள்
தொலைத்திட்ட உறவுகள்
நித்தம் என் மடிமீது
நித்திரை வார்த்திருக்கும்...!

எந்நிலையிலும்
பழிச்சொல் சாமரம்
வீசிடமாட்டேன்...!

வார்த்தைகளை
வருத்தங்களின் வடிகால்
என கொண்டு...!
நினைவுகளில் சமரசம்
பூண்டு..!
தன்னிறைவு கொண்டு..!

இலக்கண பிழை
தான் ஆயினும்
மீளப்பெற்றிட முடியா
பிழையாகி...!
பிழை கொண்ட வாழ்வே
வாழ்வோம்...!

மிகையென தோன்றினும்...
எதிரிலே எனை நீ காணினும்..!
எதிரியாய் எனை நீ காணினும்...!

யாதுமாகி நீயும் நின்
நினைவும் தொடர்ந்திட...
இருள் நிழலென
தொடர்ந்திடுவேன் - நின்
அகமும் புறமும்
அறிந்திடாமல்...!