Thursday 18 August 2016

கனவு வாழ்க்கை!!


உரிமை எடுத்துக்கொள்ள 
கோரி
நீ நடத்திய கோரிக்கை
போராட்டங்களும் 

கோபங்கள் கொள்ள 
சொல்லி உன் 
கொஞ்சும் கெஞ்சல்களும்

நான் உனது என்னும்
வாஞ்சையில் 
உன் வசமாகி
போன நானும்!

நெஞ்சோடு இன்றும்
தென்றல் காற்றென வீசும்..!
நீ அற்று போன வெற்றிடங்கள்
தேடி நிரப்பும்!

உரிமை மீறல்கள்
என் நடவடிக்கைகள் 
என்னும்
உன்னின் உதாசீனங்கள் கண்டு 
என் நிலை நானும் உணர்ந்து
கொஞ்சம் நகர்ந்தே கொண்டேன்!

கண்ணோரத்து ஈரங்களும்
நெஞ்சோரத்து இரக்கங்களும்
கருவிழியின் கடைசி 
கண்ணீரில்
கரைந்தே போனது!

என் வாழ்க்கை வழித்தடங்களின்
வலி அறிந்தவள் நீ!
அறிந்தும்
மீண்டும் சோகங்கள்
கொணர்ந்தாயே!!

ஊருக்கு என்று பேருக்கு 
ஒட்டி வைத்த
ஒற்றை புன்னகையும்
ஒடுக்கப்பட்டது!!

வீரியங்கள் அற்று போன
உன் வார்த்தை
விதைகளில்
என் விருட்ச கனவு
கலைந்தே போனது!

விவரம் அறியாமல்
நான் நம்பியிருக்க கூடும்
உன்னோடு சேர்த்து
உன் வார்த்தைகளையும்..

இனி கனவுகளின்
வாழ்க்கைகளை
உன் வார்த்தைகளில்
விவரிக்காதே!

நிழல்கள் என் கால்களுக்கு
இதமும் இடமும் தரலாம்!
நிஜங்கள் மட்டுமே என்
கால்களுக்கு
நிரந்தரம் தரும்!

நின் நிஜங்களோடு
நான் என் நிரந்தரம் 
அறிகிறேன்!

No comments:

Post a Comment