Thursday 13 August 2015

சலாம் கலாம்!!


குடும்ப சூழல் காரணமாய்
உன் சிறு வயதில் வீடு தோறும்
சென்று தினசரி நாளிதழ் விநியோகம் செய்தாய் நீ

இன்று அணைத்து நாளிதழ்களும்
உனை பற்றிய செய்திகளால்
தங்களை விநியோகம் செய்து கொள்கின்றது
இருந்தும் நீ எளிமையின் உருவமாய்!

சிறு வயதில் கனவுச்சிறகுகள் மூலம்
வானவீதியில் உலாவந்த நீ
சிறகுகள் இல்லாவிட்டால் என்ன…
நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்
என முடிவும் கொண்டு


இன்று ஏவுகணைகள் மூலம்
நாட்டிற்கு பெருமையும் நற்பெயரையும் ஈட்டி
நீயும் பல புகழ் உச்சியும் எட்டி
ஆயினும் தன்னடக்கத்தோடு நீ

ஏவுகணையின் சாதனைகள் தந்த
சந்தோசத்தை விட
சாதனையின் இடையில் ஊனமுற்றோருக்கு
எடை குறைந்த கருவி வடிவமைத்த
உன் அன்பிற்கும் பண்பிற்கும் நீயே இணை

உங்கள் இழப்பில் உலக அறிவியல்
ஓய்ந்தது என்று நாங்கள்
ஓய்ந்துவிடப்போவதில்லை!

நம் இந்திய இளைஞர்கள் அனைவரின்
இதயத்தில்
நீங்களும் உங்கள் கனவுகளும் விதைக்க பட்டுள்ளது

சமுதாய மாற்றம் தரும் பல கனவுகள் காண
சொன்ன உங்களின் கனவு நினைவாகும் வரை
எங்களுக்கு இனி விடியல் இல்லை

உன் கனவிற்கு முடிவென்பது இல்லை
எங்கள் தலைவனே!

-இவன்
நீவிர் விரும்பிய இளைய தலைமுறையின் ஒரு பிரதிநிதி!! 

No comments:

Post a Comment