Monday 6 February 2017

வாழ்நாள் சிறந்த தூக்கம்..!


சில நாட்களின்
சிறு சிறு நிகழ்வுகள்..
மகிழ்ந்துணர்ந்த தருணங்கள்..
பெரும்பதிவென
நெஞ்சில் பதியும்..!

காலச்சுழற்சியில்
நாட்கள் நகர்ந்திட..
பதியம் போட்ட செடியன
மறவாத நிகழ்வுகள்..
மறையாத காட்சிகள்..
மரமாகி காண்போம்..!

அவ்வண்ணமே
கடந்து போன ஓர் நிகழ்வு..!
இன்று நிஜமென -
கண்முன்னே  வந்து
கண்சிமிட்டியது..!!
கண் இருட்டியது..!

ஸ்தம்பித்து போன
சில நிமிடங்கள்
கடந்து
மீண்டு வரலானேன்!!

மகிழ்வென கடந்த
அந்நாளின் நினைவலைகள்
அமிழ்ந்து அமிழ்ந்து
என் நெஞ்சோடு எழுகிறது
கடல் அலைகள் என..!

கலங்கிய பார்வை
மேல்நோக்கி
உயர்ந்த புருவங்கள்..!
சிறு பிழையும் அற்று
காட்சி கண்ணில் விரிகிறது..!

ஓர் வார இறுதியின்
விடுமுறை தினத்தின்
உதயத்தில் சந்திக்கிறோம்..!

கையிருப்பின் கடைசி
சில்லறை காசு
எண்ணி எண்ணி
செலவிடுதல் போல..!

நம்முடைய காதலின்
கடைசி வார இறுதியை
துளி துளியென
கொண்டாட தொடங்குகிறோம்..!

பிள்ளையார் சுழி போட்டு
துவங்குகிறோம்..!
விநாயகர் கோவில்
வாசலில்...

மனமுருகிய வேண்டுதல்கள்
கேட்டும் உருகிடாத
முதற் கடவுளே...!

பிரிகிறோம் என்றுணர்ந்தும்
உன்னோடே பிரிவை
தொடக்குகிறோம்..!

இருவர் பிரிவிலும்
இருவர் தனி தனியாய்
ஒருவராயினும்..
இருவரோடும் இணைந்தே
இருக்க வேண்டி
உன்னோடே பிரியமாய்
பிரிகிறோம்.!!!

உன்னோடு கழித்த
எத்தனை தினசரிகள்..!
கடைசி தினசரியின்
கணங்கள் தான்
எவ்வளவு கடுமையானவை!!
எவ்வளவு கொடுமையானவை..!!

இவ்வளவு எளிதில்
ஓர் நாள் கடந்திடுமோ..?
இத்தனை நாள் வாழ்வின்
மிக சிறிய நாளாய்
தானாய் புகுத்திக்கொண்டது
என் நாட்குறிப்பில்..!

அந்தி மெல்ல மெல்ல
மேற்கில் வானோடு
தழுவிடும் காலம் அது..!

உன்னை வீடு கொண்டு சேர்க்கும்
பொறுப்பின் காரணம்
கொண்டு பயணிக்கிறேன்..!

அப்போதேனும் அகவியிருக்கலாம்
உன்னோடே என்னை கொண்டு
சென்று விடு என..!

அரசனின் கட்டளை
வேண்டி காத்திருக்கும்
படை தளபதியின்
வாளினை போல்...

உன் வார்த்தைகளுக்காக
காத்திருந்தன
என் இமை வாள்கள்..!

சிறகுகள் அற்ற
வெள்ளை தேவதை என
வந்தாய் என் வாழ்வில் நீ..!

சிறகுகள் கட்டி
பிரித்து செல்கிறது
காலம் இன்று...!

கலைந்து போன காற்றில்
கலந்து போனவை...
கடந்த அன்றைய நிஜங்கள்...
கண்ணில் கண்ணீரோடு
பயணிக்கிறோம்!!

வாழ்நாள் பெரிய
சிறந்த தூக்கம்
என் தோள்களில்
நீ கொண்டாய்!

உறங்கும் உன் பிம்பம்
காண கண்டேன்..
கண்ணாடியில்..!

மங்கிய  நீல நிற
இரவின் வெளிச்சத்தில்
கண்ணயர்ந்து உறங்கும்
சிணுங்கல் முகம்
கண்டு மயங்குகிறேன்..!

உறக்கத்தின் மயக்கம்
தெளிந்திடா வண்ணம்
ஓர் மிதவேக பயணம்!

உந்தன் உறக்கத்திலே...
உறங்கும் உன் முகம் கண்டே...
கடைசி மணித்துளிகள்
கழிக்கிறேன் நான்..!
பத்திரமாய் வந்து
சேர்க்கிறேன்..!

உறக்கம் முடித்து
தெளிந்த உறக்கத்தில்
அழுகை தொடங்குகிறாய்..!
விரயமென தவறவிட்ட
சில மணித்துளிகளுக்காக!

தவறவிட போகும்
மிச்ச வாழ்வின்
யாசகம் வேண்டி நான்..!

தோற்று போன
நாமும்,
நம்மின் சமாதானங்களும்..!

ஸ்தம்பித்து போன
சில நிமிடங்கள்
கடந்து
மீண்டு வரலானோம்!!

உண்மை உணர்ந்து
அழுகையில் பிரிகிறோம்..!
இரு வேறு
திசை ஆகிறோம்...!
இருவரும்..!

No comments:

Post a Comment