என் காதல் வளையத்துள்
உன் வளையல் சத்தம்
கேளாதூரம்
நீ நிற்பது - நன்று!!
நெருங்கி வருகையில்..
நிஜங்களின் நெருக்கம்
அன்பின் அதீதம்
கண்டு...
தூர நடை
நீயும் பழகுவாய்..!
என்னோடு தூர பார்வை
நீயும் கொள்வாய்..!
தீரும் அன்பு கொண்ட
பெயரோடு வரும்
உறவு அற்று
வாழ்வது மிக நன்று!!
நிச்சயமற்ற உறவு
தரும் அன்பின்
அரவணைப்பை விட..
தனித்த பயணம்
நம்மிருவருக்கும்
நலம் பெயர்க்கும்
என நம்புகிறேன்!!
துரத்தும் தனிமையின்
வீரியம் அறிவேன் நான்!!
பிரிவின் சோகம் தரும்
வலியின் வேதனை
அறிந்தவன் தான் நான்!!
யாதும் இருந்து பின்
யாதும் இழந்து
வாழ்வதை விட
ஏதும் இன்றி வாழ்ந்திட
விரும்புகிறேன்!!
மிகை படுத்தப்பட்ட
வார்த்தைகள் ஆயினும்
மீள வரும் வழியின்
கடுமையும் கொடுமையும்
கடந்து வந்தவை
தாம் என் கால்கள்!!
அறிந்த உறவுகள்..
வாழ் பாதையின்
பாதியில் அறுந்த
உறவுகள்...
யாவும் கடந்தவை தான்
என்னின்
உடைந்த கனவுகள்..!
திசை மாறி
பயணம் மாறி
துணை மாறி
தொலைத்த
தொலைந்த உறவுகள்
வாழ்வோடு உண்டு!!
இதனின் நினைவுகள்
மட்டுமே என்னோடு உண்டு..!
என் வாழ்வோடு உண்டு..!
No comments:
Post a Comment