Thursday 20 April 2017

இளைப்பாறும் நிழல்..!!

ஒவ்வொரு அணுவோடும்
வெற்றிடம் தேடி தேடி
நிதம் நிரப்பிய
உன் நினைவுகள்..!

செயலிழந்து போன
என் செயலிகள்
புத்துயிர் பெற்ற நாள்
நீ அறிவாய்..!

திரை கடல்
ஓடி திரவியம் தேடு..!
ஊர் அறிந்த கூற்று..!

உணர்ந்தறிகிறேன்..!
செயலியின் திரையில்
தவற விட்ட திரவியம்
காண்கிறேன்..!
கண்களின் வழியே
திரவம் வழிய காண்கிறோம்..!

மிச்சங்களின் உச்சமோ
உச்சங்களின் எச்சமோ
எச்சங்களின் மிச்சமோ..

எதுவாகி போனோம்
நாம் இன்று..?

பகிர்ந்திட முடியா
ஒன்றொன்று..!
நிம்மதி பயிர்க்குமென
நானே புறம்தாண்டி
வந்த தருணம்..!

தோன்றிடும் உள்ளெண்ணம்
பகிர்ந்திட முடியா
உறவாகவே
இன்றோடும் தொடர்கிறோம்..!

தூக்கம் தாங்கிய தோள்கள்
துக்கம் ஏந்திய விரல்கள்
யாவும் தொலைத்த
வன்கொடுமைகள் தாண்டி

வரும் பொழுதுகள்
எவையும் தவறவிட
திராணியற்று
இளைப்பாறும் நிழலென
தோள்  வேண்டி
தொடர்கிறோம்...!

No comments:

Post a Comment